திருவான்மியூரில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடிவெட்டிக்கொலை: 4 பேர் கைது

துரைப்பாக்கம்: திருவான்மியூர், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (36). பிரபல ரவுடியான இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்,  நேற்று காலை திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், விக்கியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.   இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அந்த 2 பேர் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

தகவலறிந்த திருவான்மியூர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, விக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. இதையடுத்து, விக்கியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கோபி (27), சூரி (22), விக்கி (23), அஜித் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: