‘நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான்தான்’; கங்கனா தடாலடி

மும்பை: சமீபத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து, நடிகை கங்கனா ரனவத், ‘இது துக்ககரமான, வெட்கக்கேடானது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி நாடு தான்’ என்று பதிவிட்டிருந்தார். இவரது பேச்சை கண்டித்து சீக்கிய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியது மட்டுமின்றி, போலீசில் புகார் அளித்ததால் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கங்கனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருந்திட கங்கனாவின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும். விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அவர் மீது அடுத்த ஆறு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஹ... ஹா... ஹா... நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண்’ என்று பதிவிட்டு அதில் கிரீடம் இமோஜியையும் சேர்த்துள்ளார். இதுவும் புதிய  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: