திருப்போரூர்: திருப்போரூர் அருகே பெரிய விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (36). இவரது மனைவி தேவதி. கடந்த சில நாட்களுக்கு முன் மகேஷ்குமார், தனக்கு சொந்தமான வேனை விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை சிறுசேரி பாரத ஸ்டேட் வங்கியில் போட்டுள்ளார். நேற்று மதியம் மகேஷ்குமார், மனைவியுடன் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3.3 லட்சத்தை எடுத்தனார். அந்த பணத்தை பைக் பெட்டியில் வைத்து கொண்டு, 2 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர். திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஓட்டலில் குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வந்தனர். அப்போது, பைக் பெட்டி திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் இருந்த ரூ.3.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே தாமல்வார் தெருவில் மாவு கடை நடத்தி வருபவர் பூங்கொடி (36). நேற்று இரவு பூங்கொடி, வியாபாரம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, படப்பை அடுத்த சிறுமாத்தூரை சேர்ந்தவர் முருகன் (31). இவரது மனைவி தீபிகா (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் தீபிகா, கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தாய் முனியம்மாள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் முருகன், மாமியார் வீட்டுக்கு நேற்று சென்று, தீபிகாவை குடும்ப நடத்த அழைத்தார். அதனால் மனைவியை கடுமையாக தாக்கினார். இதை பார்த்த முனியம்மாள், இனிமேல் என் மகள் உன்னுடன் வாழ மாட்டாள். என் மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகைகள் மற்றும் பைக் ஆகியவற்றை திருப்பி கொடு என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாமியார் முனியம்மாள் வாங்கி கொடுத்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.