காஞ்சிபுரம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் பூஜ்ய கேள்வி நேரத்தின் போது, புயல், மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்கி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்பி செல்வம் வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த 3 வாரங்களாக வடகிழக்கு பருவ மழையால் தமிழ்நாடு, குறிப்பாக காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் வசிக்கும் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்திய ஆய்வு குழுவினர், அதற்கான அறிக்கையை சமர்பித்து இருப்பார்கள் என நம்புகிறேன். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை சேதங்களை விரைவில் சரி செய்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.