கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், புழல், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் பயணித்து படித்து வருகிறார்கள். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பணிமனையிலிருந்து சத்தியவேடு வரை செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனை கண்ட, செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் மற்றும் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் போக்குவரத்து ஆணையருக்கு இதை பற்றி தகவல் தெரிவித்தனர். மண்டல போக்குவரத்து துறை இணை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று கவரப்பேட்டை பள்ளி படிக்கும் மாணவனை சந்தித்து அறிவுரை வழங்கினார்.