தேசிய நெடுஞ்சாலையில் காட்டுயானைகள் முகாம்: வாகனங்களில் செல்வோர் பீதி

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர்  பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தீவனம் தேடி சுற்றித் திரிகின்றன. நேற்று மதியம் ஆசனூர் அடுத்துள்ள கார்ப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே 3 காட்டு யானைகள் சாலையோரம் நின்றிருந்தன.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்தும் தாளவாடி மலைப் பகுதியில் இருந்தும் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தமிழகம் நோக்கி செல்லும் லாரிகளில் இருந்து சிதறி விழும் கரும்புள்ளிகளை தின்பதற்காக காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். அடிக்கடி காட்டு யானைகள் பகல் நேரங்களில் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சாலையோரம் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை இதனால் வாகன ஓட்டிகள் அருகே சென்று வாகனங்களை நிறுத்துவது மற்றும் புகைப்படம் எடுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: