மும்பையில் மம்தா - பிரபலங்கள் சந்திப்பு; நாட்டிற்கு பெண் பிரதமர் தயார்!: பாலிவுட் நடிகை தடாலடி கருத்து

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியுடன் பிரபலங்கள் சந்திப்பு நடந்த போது, நாட்டிற்கு பெண் பிரதமர் தயார் என்று பாலிவுட் நடிகை தடாலடியாக கருத்து தெரிவித்தார். வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக  ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்தல் என்ற திட்டத்தின்  அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான  மம்தா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக எதிர்கட்சியான  காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார். மூன்று நாள் பயணமாக மும்பை சென்ற அவர், தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர்களை சந்தித்து, ஆளும் பாஜகவை தேர்தலில்  தோற்கடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், சமூக ஆர்வலர் மேதா பட்கர், இயக்குனர் மகேஷ் பட், நடிகர் ரிச்சா சதா, நடிகர் ஸ்வாரா பாஸ்கர், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனவர் ஃபரூக்கி உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தார்.

அப்போது பாலிவுட் நடிகை ரிச்சா சதா கூறுகையில், ‘பெண் பிரதமரை முன்னிருத்த நாங்கள் தயாராக உள்ளோம். மம்தா பானர்ஜிக்கு அதற்கான தகுதிகள் அனைத்தும் உள்ளன. கடவுளின் ஆசியும் அவருக்கு உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகை ரிச்சா சதா, ‘ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்லும் தேசிய கலாசாரத்தை  உருவாக்கி இருக்கிறோம். இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி வழக்குத் தொடுத்திருப்பது மகிழ்ச்சி’ என்று கூறினார். இவர், கவர்ச்சி நடிகை ஷகிலாவின் பயோபிக் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

Related Stories: