சாயல்குடி: கமுதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியதால், 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்தின்றி முடங்கினர். தரைப்பாலத்தை கடக்க பள்ளி மாணவர்களை, பெற்றோர் தோளில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த நவ. 27ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நீரானது தற்போது பரளையாறு வழியாக கிருதுமால் நதி ஓடை, குண்டாறு வழித்தடங்களில் சென்று காட்டாறு வெள்ளமாய் ஓடுகிறது. இதனால் குண்டாறு வழித்தடத்தில் உள்ள அனைத்து சாலைகள், தரைப்பாலங்கள் மூழ்கின. கமுதி அருகே செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் ஆகிய 5 கிராமங்களுக்கு கமுதி - பார்த்திபனூர் சாலை விலக்கிலிருந்து தரைப்பாலம் வழியாக பிரதான சாலை செல்கிறது.இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வழித்தடத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலத்தில் ஏறக்குறைய இடுப்பளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலம் மூழ்கியது.