மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் பிக்கட்டி, எடக்காடு சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுவதும், மண் சரிவுகள் ஏற்படுவதுமாக உள்ளது. சேரனுார், மஞ்சூர் பகுதிகளில் இரண்டு வீடுகளும் இடிந்து விழுந்தன.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை துவங்கி இரவு முழுவதும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில், மஞ்சூர் பிக்கட்டி சாலையில் கட்லாடா பாலம் அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால், மஞ்சூரில் இருந்து பிக்கட்டி வழியாக ஊட்டி செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், நேற்று காலை எடக்காடு சாலையில் முக்கிமலை அருகே ராட்சத மரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்ததால் மஞ்சூர் எடக்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன நகர முடியாமல் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.