மேலூர்: மேலூர் அருகே மயானத்திற்கு பாதையில்லாததால், கழுத்தளவு தண்ணீரில் கயிறு கட்டி, இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் தூக்கி சென்று கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியம் வஞ்சிநகரம் ஊராட்சியில் உள்ளது கண்டுகப்பட்டி கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு மயானம் செல்வதற்கு உரிய பாதைவசதி இல்லை. இவர்களுக்கான மயானம் அருகில் உள்ள கொடுக்கம்பட்டி எல்கையில் உள்ளது. இங்கு செல்ல, வழியில் உள்ள கண்மாய், விளைநிலங்களை கடந்து செல்ல வேண்டும். தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கண்டுகப்பட்டியை சேர்ந்த செல்வம்(60) என்ற முதியவர் இறந்து போனார். இவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கிராமமக்கள், தண்ணீர் நிறைந்த கண்மாயில் கழுத்தளவிற்கு மூழ்கியபடி சுமந்து சென்றனர். தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருக்கவே, சுமந்து செல்வதில் தடை ஏற்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.