சேலம் கோட்டத்தில் அதிரடி சோதனை ஒரே மாதத்தில் ரயிலில் 17,657 பேர் ஓசிப்பயணம்: 97.47 லட்சம் அபராதம் வசூல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 17 ஆயிரத்து 657பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 97.47 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வருவதால், தற்போது ரயில்கள் இயக்கம் வழக்கமான நிலைக்கு வந்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில், ரயில்களில் பரிசோதனை தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர்அடங்கிய குழுவினர் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், கடந்த மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், மாஸ்க் அணியாமல் பயணம் செய்தவர்கள் உள்பட  17 ஆயிரத்து657 பேர் சிக்கினர். இவர்கள் அனைவர் மீதும் ரயில்வே சட்டப்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு, 97.47 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம்  இருந்து 97.47 லட்சம் வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டணைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Related Stories: