விராலிமலை: விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பியதை வரவேற்கும் விதமாக அப்பகுதிமக்கள் கும்மி அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவி வரவேற்றனர்.தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையானது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விராலிமலையில் 55 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் மழை பொழிவாகும். தற்போது வரை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் மளமளவென்று நிரம்பி வருகின்றன.