போலீசாரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை மீதான நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: போலீசாரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை மீதான நன்மதிப்பு; மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூர்நிஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருவாரூர் பொதக்குடியில் தனக்கு சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முக்ஃபாரக் நாஃபியா, யூசப்  நாஃபியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, நிலத்தின் விலை அதிகமாகவிட்டதாக கூறி முன்தொகையை உடனடியாக திரும்பி தர வேண்டும் என மூவரும் தன்னிடம் கேட்டதாகவும், பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தன் மீதும், தனது மகன் மீது கூத்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் மனுவில் கூறியுள்ளார். தனக்கு எதிரான நிலத்தகராறு புகாரை பெற்ற உதவி ஆய்வாளர், கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், 3 வாரத்தில் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டதாகவும் நூர்நிஷா மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முயற்சித்த நிலையில், நிலத்திற்கு பணம் கொடுத்த மூவரும், உதவி ஆய்வாளர் மற்றும் சிலரும் நவம்பர் 18ம் தேதி தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னையும், தன் கணவரையும் அடித்து வீட்டை விட்டு விரட்டி சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டதுடன் வீட்டில் இருந்த பணம் மற்றும் 27 சவரன் தங்க நகைகளை எடுத்து சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யவும், வீட்டை மீட்டு ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நவம்பர் 27ம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் கூறியுள்ளதையும், உதவி ஆய்வாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், போலீசாரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் காவல்துறை மீதான நன்மதிப்பு; மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: