2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திருச்சூர் திரைப்பரையார் கோயில் ஏகாதசி விழா: பஞ்ச வாத்தியங்கள் முழங்க அணிவகுத்த யானைகள்..!!

திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரைப்பரையார் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட 11 யானைகளுடன் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. திரைப்பரையாரில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில் ஆண்டுதோறும் மலையாள விருச்சக மாதம் வரக்கூடிய ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பஞ்ச வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட 11 யானைகள் அணிவகுத்து நிற்க உற்சவ மூர்த்தியான திரைப்பரையாரப்பன் திடம்பு ஏந்தி கோயிலை சுற்றி வளம் வர பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.

Related Stories: