புதுடெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ1.31 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக கடந்த மாத வசூல் உச்சபட்ச அளவை அடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பர் மாதத்தில், மொத்தம் ரூ1,31,526 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ23,978 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ31,127 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ66,815 கோடியாகவும் உள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ரூ32,165 கோடியும் அடங்கும். இதுபோல் செஸ் ரூ9,606 கோடி வசூலாகியுள்ளது. இதில், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் மூலம் ரூ653 கோடி கிடைத்துள்ளது. கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு இதே மாதம் வசூலானதை விட சுமார் 25 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில், ரூ1.05 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியிருந்தது. மேலும், கடந்த மாத ஜிஎஸ்டி வசூலானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, உச்ச பட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ1,30,127 கோடி வசூல் ஆனது. இதன்மூலம் தொடர்ந்து 2வது மாதமாக கடந்த மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. மேலும், இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சமாக ரூ1,39,708 ேகாடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. கடந்த மாதம் வசூலான தொகை 2வது புது உச்சமாக கருதப்படுகிறது.