முன்னணி நிறுவனங்களில் சிஇஓ; கோடிகளில் குவியும் சம்பளம்; வீறுநடை போடும் இந்தியர்கள்: புதுவரவாக இணைந்தார் டிவிட்டரின் பராக் அகர்வால்

புதுடெல்லி: உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவாளிகளுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வரவேற்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மற்ற பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவைச் சேர்ந்த அதிபுத்திச்சாலிகளையே அமெரிக்கா அதிக உயரத்தில் அமர வைத்து அழகு பார்க்கிறது. இதனால்தான், அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களின் சிஇஓக்களாக அதிகளவில் இந்தியர்கள் இருந்து வருகிறார்கள். தற்போது அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர்தான் பராக் அகர்வால்.

டிவிட்டரின் புதிய சிஇஓவாக 37 வயதாகும் பராக் அகர்வால் பதவியேற்றுள்ளார். தற்போது இவர் தான் சமூக வலைதளங்களில் ஹாட் ஆப் த டாப்பிக்காக இருந்து வருகிறார். மும்பை ஐஐடியில் படித்த பராக் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். யாஹூ, மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராக பணியாற்றிய பராக், 2011ல் டிவிட்டரில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அடுத்த 10 ஆண்டில் டிவிட்டர் சிஇஓவாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன் மூலம், அமெரிக்க நிறுவனங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கி குவிக்கும் மதிப்புமிக்க சிஇஓக்கள் பட்டியலில் பராக் அகர்வாலும் இணைந்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? அமெரிக்க டாலரில் 10 லட்சம் டாலர், அதாவது, இந்திய ரூபாயில் 7.5 கோடி. மாதத்திற்கு ரூ62.5 லட்சம் சம்பளம் பெறப் போகிறார் பராக். இதுமட்டுமின்றி, 12.5 மில்லியன் டாலர் (ரூ93.9 கோடி) மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 16 காலாண்டுகளுக்குப் பெற உள்ளார். அதாவது அடுத்த 4 ஆண்டிற்கு பிரித்து தரப்படும்.

இதன்படி கணக்கிட்டால், இவர் ஆண்டுக்கு ரூ31 கோடி பெற உள்ளார். மேலும், இதர சலுகைகள் உட்பட மாதத்துக்கு ரூ2.5 கோடியாக இவருடைய மொத்த வருமானம் இருக்கும். இதுதவிர, இலக்கை எட்டி விட்டால், ஆண்டு அடிப்படை சம்பளத்தில் 150 சதவீதம் போனசாக கிடைக்கும். இது பராக் அகர்வாலுக்கு பிள்ளையார் சுழிதான். ஏனெனில், டிவிட்டர் உலகளவில் கோடிக்கணக்கான ஆக்டிவ்வான பயனர்களை கொண்ட நிறுவனம். இந்தியாவில் மட்டுமே 1.75 கோடி பயனர்கள் உள்ளனர்.

இதனால், பராக் அகர்வாலின் சம்பளம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர் துறை வல்லுநர்கள். தற்போதைய நிலையில் இந்திய வம்சாவளி சிஇஓக்களில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமையை தக்க வைத்திருப்பவர் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைதான். இவரது ஆண்டு வருமானம் ரூ2,100 கோடி. மாதத்திற்கு எல்லா சலுகைகளையும் சேர்த்து ரூ175 கோடி பெறுகிறார். இதுதவிர, மைக்ரோசாப்ட், ஐபிஎம் என பல நிறுவனங்களின் சிஇஓ.க்களாக இந்திய வம்சாவளிகளே உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓ.க்களாகவும், முக்கிய பல பதவிகளையும் வகித்து வருகின்றனர். இதற்கு காரணம், அவர்களின் திறமை, அறிவு மட்டுமல்ல, இந்தியர்களுக்கே உண்டான நேர்மை, கடுமையாக உழைக்கும் குணம், வீடு வாசல் மறந்து நிறுவனத்திற்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து உயர் படிப்பு மற்றும் பல வருட அனுபவங்களால் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்கள் என அமெரிக்கர்களே புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

யாருமே சாதாரணமில்லை

* அமெரிக்காவில் தற்போது 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில், 16 லட்சம் பேர் விசா பெற்றவர்கள். 14 லட்சம் பேர் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். 10 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.

* அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் சராசரி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ92.7 லட்சம்.

* இந்திய வம்சாவளியினர் தகவல் தொழில்நுட்பம், நிதி மேலாண்மை மற்றும் மருத்துவம் உட்பட பல உயர் ஊதியம் தரும் துறைகளில் வேலைகளில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளனர்.

* அமெரிக்காவில் ஒன்பது சதவீத மருத்துவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குடியேறியவர்கள்.

Related Stories: