ராமேஸ்வரம்: ஒன்றிய அரசின் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு சேவையை டிச. 31ம் தேதி மாலை 5 மணியுடன் நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு சேவை நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தூர்தர்ஷன் நிலையம் இம்மாத இறுதியுடன், தனது 25 ஆண்டுகால பொதிகை தரைவழி ஒளிபரப்பு சேவையை முடித்துக்கொள்கிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரசார்பாரதி நிறுவனம் தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.