திருவள்ளூர்: அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, ரூ96 லட்சத்தில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்பு மூலம் ரூ96 லட்சத்தில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.குகானந்தம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ச.கந்தசாமி வரவேற்றார். ஊராட்சி தலைவர் பி.அரிபாபு, துணைத் தலைவர் சதீஷ்குமார், மணவாளன், கோவிந்தசாமி, கேப்டன் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதில் ராஜா, தமிழ்வளவன், ஆசிரியர்கள் எஸ்.ஜெயந்தி, அ.அன்பரசி, வி.சுசிலா, டி.நித்திய கீதா, சி.மகாலட்சுமி, வி.சி.தர், எஸ்.செந்தில், கட்டிடப் பொறியாளர் மூர்த்தி, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.