×

உத்தவ் மகன், சரத்பவாருடன் மம்தா ஆலோசனை: காங்கிரசை ஒதுக்கிவிட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைய முடியாது!: தேசியவாத காங். அமைச்சர் பரபரப்பு பேட்டி

மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகனை சந்தித்த மம்தா, இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திக்கிறார். காங்கிரசை ஒதுக்கிவிட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைய முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் ெதரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை களம் இறக்கினார். அடுத்தாண்டு தொடக்கத்தில் 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோவா, உத்தரபிரதேசத்தில் திரிணாமுல் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவான மற்றும் வலுவான தலைவராக தன்னை தயார்படுத்தி வரும் மம்தா, நேற்று மகாராஷ்டிரா மாநிலம் வந்தார். மும்பை சித்தி விநாயக் கோயிலில்  வழிபாடு செய்த அவர், தனது தேசிய அரசியல் பயணத்தை மகாராஷ்டிராவில் முதன்முதலாக தொடங்கினார்.

சிவசேனா  தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே (சுற்றுலாத்துறை அமைச்சர்), அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத்தை சந்தித்தார். முன்னதாக உத்தவ் தாக்கரேவை  சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை சரியில்லாததால் அவருடனான சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.  மம்தா பானர்ஜி சிவசேனா தலைவர்களை சந்தித்து தேசிய அரசியலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, இன்று மம்தா பானர்ஜி சந்திக்கிறார். இவருடனான சந்திப்பு, மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக சரத்பவார் இருப்பார் என்று கூறப்படுவதால், மம்தாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர். அதனால், காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது, மேற்குவங்கத்திற்கு வெளியே தனது தளத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தளத்தை விரிவுபடுத்தும் உரிமை உண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவைத்துவிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றுபடுதல் என்பது சாத்தியமற்றது. மம்தா பானர்ஜி - சரத் பவாரின் சந்திப்பு சாதாரண சந்திப்புதான்’ என்றார்.

Tags : Mamta ,Utav Son ,Saratpwar ,Congress , Opposition, Congress, Nationalist Cong. , Sensational interview
× RELATED மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி,...