மெக்ஸிக்கோ: சர்வதேச பலூன் திருவிழா வருடந்தோறும் மெக்ஸிகோ நாட்டின் லியோன் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பிரதிநிதிகளுடன் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற 20 வது சர்வதேச பலூன் திருவிழா மெக்ஸிக்கோ குவானா ஜீவாட்டோ மாநில கவர்னர் டிகோ சின்வூ ரோட்ரிக்கஸ் வெல்லேஜோ மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் ஜீவான் ஜோஸ் அல்வராஸ் புருனல் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் இந்திய சுற்றுலாத் துறையின் சார்பாக தமிழக சுற்றுலா துறையின் பிரதிநிதிகளாக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன்,சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற இந்த பலூன் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன. இந்த பலூன் திருவிழாவின் சிறப்பு அம்சமாக இந்திய சுற்றுலாத்துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுலா தள பெருமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இந்திய தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலாத் துறையின் முத்திரைகளான, incredible india மற்றும் enchanting tamil nadu என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பலூன் பறக்க விடப்பட்டது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஏற்கனவே பலூன் திருவிழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி மாதம் 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா நடத்த ஆயத்த பணிகள் கொரோனா தொற்று பரவலை பொறுத்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.