செக் மோசடி வழக்கில் ஆஜராகாத நடிகை அமீஷா பட்டேலுக்கு வாரன்ட்

போபால்: மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பணியாற்றியவர், பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். தமிழில் விஜய்யுடன் இணைந்து புதிய கீதை படத்தில் நடித்திருந்தார். தனது நிறுவனம் சார்பில் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ரூ.32.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை திருப்பி தரும் வகையில், 2 தவணையாக அமீஷா பட்டேல் தரப்பில் காசோலையாக தரப்பட்டது. ஆனால், அந்த காசோலையின்படி குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம், அமீஷா பட்டேல் மற்றும் அவரது நிறுவனத்தின் மீது மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், அமீஷா பட்டேல் விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது அமீஷா பட்டேலுக்கு ஜாமீன் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. வரும் 4ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரன்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: