திருமலை: ஆந்திராவில் தொடர் கனமழையால் கூடூர் பாம்பலேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 20 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லூர் எஸ்பி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும், விவசாய விளை நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 10.7 செ.மீட்டராக பதிவாகியுள்ளது. பொதலக்கூரு மண்டலத்தில் அதிகபட்சமாக 20.2 செ.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.