உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆய்வு செய்ய 3 பேர் குழு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது? எந்த அடிப்படையில் அவர்களுக்கான வருமான உச்ச வரம்பு (ஆண்டுக்கு ரூ.8 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பியது. இது பற்றி மறுஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக ஒன்றிய அரசு நேற்று குழு அமைத்தது. இதில், ஒன்றிய நிதித்துறை முன்னாள் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்கோத்ரா, ஒன்றிய அரசுக்கான முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சய் சன்யால் இடம் பெற்றுள்ளனர். தனது அறிக்கையை 3 வாரங்களில் சமர்ப்பிக்கும்படி இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: