கர்தார்பூர் குருத்வாராவில் மாடல் அழகி போட்டோ ஷூட் பாக். தூதருக்கு இந்தியா சம்மன்

புதுடெல்லி: பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் உடைகளை விளம்பரம் செய்ய போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த புகைப்படங்களை மாடல் அழகி இன்ஸ்டாகிராமில் வெளியிட, சீக்கியர்களின் மத நம்பிக்கையை அவமதித்து விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் அதிகாரிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. அப்போது, குருத்வாராவில் மாடல் அழகி போட்டோ ஷூட் நடத்தியது கண்டிக்கத்தக்க சம்பவம் என கூறிய இந்திய அரசு, இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மையினரின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: