செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு: அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மர்மநபர்கள் சிலர் பசுவின் தலையை வீசி சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக தங்களை துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்புப்படையினர் கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்ததாக சாகுல் ஹமீது, அல்ஹஜ், ரபீக் ராஜா,ஷாயின்ஷா ஆகியோர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது மனுதாரர்களுக்கு எதிராக போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, மனுதாரர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரரில் ஒருவரான சாகுல் அமீது இறந்து போனதால் அவருக்கான இழப்பீடு தொகையை அவரது தாயார், மகனிடம் வழங்க வேண்டும். மேலும், மனுதாரர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், மோகன், ஏட்டு சங்கரநாராயணன், போலீஸ்காரர் சித்திரவேல் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: