வருகின்றன அடுத்தடுத்த காற்றழுத்தங்கள் ஜனவரி 24 வரை தமிழகத்தில் மழை தான்

சென்னை:  வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வாரம் ஒரு முறை என அடுத்தடுத்து 7 காற்றழுத்தங்கள் தமிழகத்தை நோக்கி வர உள்ளன என்று நீண்ட கால வானிலை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஜனவரி 24ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தற்போது நீடித்து வந்த காற்று சுழற்சி நேற்று அதி காலையில் வலுவிழந்து மெலிந்த காற்று சுழற்சியாக மாறியது.  இது நேற்று மாலையில் முற்றிலுமாக செயலிழந்து தமிழகத்தில் இருந்து விலகியது.  

இது தவிர, கேரளா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வடக்கு நோக்கி சென்று, குஜராத் பகுதிக்கு சென்று இன்று கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று முன்தினம் இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்குள் நுழைந்து, நேற்று அதிகாலையில் தாய்லாந்துக்கும், மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது தெற்கு தாய்லாந்து பகுதியில் நிலை கொண்டு இருந்தது.

ஆனால் உயர் அழுத்தம் காரணமாக நேற்று அது தெற்கு அந்தமான் பகுதிக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக அந்தமானின் தெற்குப் பகுதியை  கடந்து இன்று வங்கக் கடல் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து வானிலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஒட்டுமொத்த ஆசியப் பகுதியில் குறிப்பாக தென் சீனக் கடல், தாய்லாந்து வளைகுடா, வங்கக் கடல் ஆகியவை இணைந்த அமைப்பும், குமரிக்கடல், அரபிக் கடல் இணைந்த அமைப்பையும் நீண்ட கால வானிலை ஆய்வின்படி உற்றுநோக்கும் போது, அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, நவம்பர் 30ம் தேதி வங்கக் கடல் வழியாக ஆந்திரா- ஒடிசா பகுதிக்கு வரும் என்று உலக வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். அதையே எதிர்பார்த்தும் உள்ளனர். இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 1, 2ம் தேதிகளில்  மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் ஒரு சில வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி மாறும் போது, அது டிசம்பர் 3, 4, 5ம் தேதிகளில் தமிழகம் வழியாக அரபிக் கடல் நோக்கி செல்லும். அப்படி செல்லும் போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில்  டிசம்பர் 2ம் தேதி வரை வெயில் நிலவும். அதனால் ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக  நீலகிரியில் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், தென் மாவட்டங்களில் சற்று அதிமாக மழை பெய்யும். இதையடுத்து, டிசம்பர் 6, 7ம் தேதிகளில் மழை பெய்வது நின்று சற்று இடைவெளியை ஏற்படுத்தும். பின்னர் 7, 8ம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் உருவாகி 9ம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10, 11, 12ம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்துக்கு நெருங்கி வரும். அதன் காரணமாவும் தமிழகத்தில் மழை பெய்யும்.

அதற்கு பிறகு டிசம்பர் 15ம் தேதி வரை மழை பெய்யாமல் நின்று, 16ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும். டிசம்பர் 26ம் தேதிக்கு பிறகு  மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகி டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை மழை பெய்யும். இதன்படி பார்த்தால் இடைவெளி விட்டு,  விட்டு  வாரம் ஒரு காற்றழுத்தம் வீதம் தமிகத்துக்கு மழை கொடுக்க உள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்களும்  உருவாகி ஜனவரி மாதம் 24ம் தேதி வரை தமிழகத்தில்  மழை நீடிக்கும்  வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில்  தமிழகத்தில்  8 ஆயிரம் நீர் நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. சிறு ஆறுகள் மு தல் பெரிய ஆறுகள் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. நீர்த் தேக்கங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. அவற்றில்  இருந்தும் குறிப்பிட்ட அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பாதிப்புகளில்  இருந்து தமிழகம் மீளவதற்குள் அடுத்தடுத்த காற்றழுத்தங்கள் வர உள்ளதால் இன்னும் எவ்வளவு பாதிப்பை மக்கள் சமாளிக்க வேண்டி இருக்குமோ என்பதை இப்போதே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில்  இருந்து தமிழகம் மீள்வதற்குள் அடுத்தடுத்த காற்றழுத்தங்கள் வர உள்ளதால் இன்னும் எவ்வளவு பாதிப்பை மக்கள் சமாளிக்க வேண்டி இருக்குமோ என்பதை இப்போதே கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: