×

பவர் பேங்க் ஆப் மூலம் ரூ.150 கோடி மோசடி வழக்கு சீன நிறுவனத்திற்கு உதவிய முக்கிய குற்றவாளி ஆடிட்டர் அவிக் கெடியா கைது: 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை

சென்னை: பவர் பேங்க் ஆப் மூலம் முதலீடு செய்தால் 5 முதல் 10 சதவீதம் வரை முதலீடு செய்யும் பணத்திற்கு வருவாய் கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் விளம்பரங்கள் செய்தனர். அதை நம்பி பலர் தங்களது செல்போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக பவர் பேங்க் ஆப் பதிவிறக்கம் செய்து அந்த செயலி மூலம்  ரூ. 1000 முதல் ஒரு லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். முதலில் முதலீடு செய்த நபர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பணம் அனுப்பியுள்ளனர். பிறகு முதலீடு செய்த நபர்கள் அனைவருக்கும் முதலீடு செய்த பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட பலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பவர் பேங்க் ஆப் மோசடி நாடு முழுவதும் நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் 122க்கும் மேற்பட்டோர் மற்றும் இந்தியா முழுவதும் 5 லட்சம் பேர் இந்த ஆப்பில் முதலீடு செய்து பல லட்சம் வரை இழந்ததும் தெரியவந்தது. அந்த வகையில் ரூ.150 கோடி வரை மோசடி நடந்து இருப்பதும், இந்த மோசடியில் கிடைத்த பணம் சீனாவில் இயங்கும் நிறுவனத்திற்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து பவர் பேங்க் ஆப் என்ற செயலியில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் யாராவது இருந்தால், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் வசந்தியிடம் புகார் அளிக்கலாம் என்று மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி சைபர் க்ரைம் போலீசார் முக்கிய குற்றவாளியான அவிக் கெடியா மற்றும் ரொனக் பன்சால் உட்பட 11 பேரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவிக் கெடியா மற்றும் ரொனக் பன்சான் ஆகியோர் ஆடிட்டராக உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து போலியாக 110 நிறுவனங்கள் தொடங்கி பலரை வேலைக்கு ஆட்களை அமர்த்தி இந்த மோசடியில் ஈடுபட்டதும், பிறகு அந்த போலி நிறுவனங்களை சீனாவை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. நிறுவனங்களை விற்பனை செய்தாலும் இருவரும் சீனா நிறுவனத்திற்கு தொடர்ந்து வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து டெல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் டெல்லி சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான அவிக் கெடியாவை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் டெல்லி சென்ற சிபிசிஐடி போலீசார்மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவிக் கெடியாவை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவிக் கெடியைவை சிபிசிஐடி போலீசார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவரை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Auditor ,Avik Kedia , Auditor Avik Kedia arrested for two days in Central Bank case
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்