நாடாளுமன்ற துளி

குடிமக்கள் பதிவேடு பற்றி முடிவு எடுக்கவில்லை- ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்.

மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதில்கள் வருமாறு: நாடு முழுவதும், ‘இந்திய குடிமக்கள் பதிவேடு’ தயாரிப்பது பற்றி ஒன்றிய அரசு இதுவரை முடிவு எடுக்கவில்லை. ‘குடிமக்கள் திருத்தச் சட்டம்’ (சிஏஏ), கடந்தாண்டு ஜனவரி 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதும், தகுதி உடைய அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும், தேசிய அளவில் ‘தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு’ தயாரிப்பது பற்றியும் இதுவரை அரசு முடிவு எடுக்கவில்லை.

6 லட்சம் இந்தியர் குடியுரிமை துறப்பு: கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். 2017ம் ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 49 பேரும், 2018ல் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 561 பேரும், 2019ம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 17 பேரும், 2020ம் ஆண்டில் 85 ஆயிரத்து 248 பேரும், 2021ம் ஆண்டில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 287 பேரும் தங்களின் இந்திய குடியுரிமை விட்டு கொடுத்துள்ளனர். வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, வெளிநாடுகளில் தற்போது 1 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 718 இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

விதர்பா தனி மாநிலம் பரிசீலிக்கவே இல்லை: ஒரு மாநிலத்தை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்படுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு இது நேரடி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால், புதிய மாநிலங்களை உருவாக்குவதில் உள்ள அனைத்து விதமான காரணிகள், பல்வேறு தரப்பினரின் கருத்துகள், ஒருமித்த கருத்து ஆகியவற்றை கருத்தில் கொண்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். மகாராஷ்டிராவை பிரித்து விதர்பா தனி மாநிலம் உருவாக்குவது பற்றி ஒன்றிய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அது பற்றி பரிசீலனையும் செய்யப்படவில்லை. ஆனால், தனி மாநிலம் கோரி ஏராளமான தனிப்பட்ட நபர்களும், அமைப்பை சேர்ந்தவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: