ரூ.1.20 கோடி அரசு நிலம் மீட்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே அச்சரவாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேயக்கால் புறம்போக்கு நிலம் புல எண் 271ல் சுமார் 10 ஏக்கர் நிலத்தை, தனிநபர்கள் சிலர் பென்சிங் கற்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, திருப்போரூர் வட்டாட்சியருக்கு அச்சரவாக்கம் கிராம விஏஓ அறிக்கை அனுப்பினார். அதன்பேரில் திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் நேற்று மேற்கண்ட பகுதிக்கு நேரில் சென்று, நிலத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிலத்தை ஆக்கிரமித்து நடப்பட்டு இருந்த பென்சிங் கற்கள் அகற்றப்பட்டு, அந்த நிலம் அரசு வசம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம்  இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். 

Related Stories: