ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக, அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா?: அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக, அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பென்னலூர் என்ற கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாக கூறி அந்த கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தாக்கல் செய்த பதில் மனுவில், தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும் பாதையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், எந்த விவரங்களும் இல்லாமல் தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில் மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.மேலும், ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக, அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்புகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்து அரசு சொத்துக்களை பாதுகாக்க அதிகாரிகள் விழுப்புடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

தேவாலயம் கட்டுவதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தேவாலயம் எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதால் அதை 4 வாரங்களில் இடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நீதிமன்றத்திற்கு உண்மை தகவல்களை மறைக்கும் வகையில் எந்த விவரங்களும் இல்லாமல் பதில் மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆக்கிரபுக்கள், சட்டவிரோதமாக மத வழிபாட்டு தளங்கள் கட்டியிருந்தால் அவற்றுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: