சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுங்கள்!: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2018ல் 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதியது. தொழில்நுட்பம் கோளாறால் குறைந்த உயரத்தில் பறந்து விமானம் 5 அடி உயர சுற்றுச்சுவர், அங்கு உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் மோதியது. இந்த விமான விபத்தை தொடர்ந்து, விமானியின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்து சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து விமானி கணேஷ் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் 2018 ஆண்டு வரை 4,270 மணி நேரம் விபத்தில்லாமல் கணேஷ் பாபு விமானம் ஓட்டியதாக அவரது வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளார். டேக் ஆஃப்பின் போது என்ஜின் உந்துதலை கண்காணிக்க விமானி தவறிவிட்டதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் புகார் அளித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மகாதேவன், விமானி மனு தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: