திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானது : 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடப்பா கல் பாரம் ஏற்றிய லாரி அந்தியூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.

26வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக, திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வாகனங்கள், லாரி பழுது ஏற்பட்டதால் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியை பழுது நீக்கும் பணி நடைபெற்றது. 4 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் வரிசையாக அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories: