16 ஆண்டுகளுக்கு பின் களரம்பட்டி ஏரி நிரம்பி வழிந்ததால் சிறப்பு வழிபாடு: கிராம மக்கள் கொண்டாட்டம்

பெரம்பலூர்: 16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி ஏரி நிரம்பி வழிந்ததால் கிராமமக்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் ஆண்டு சராசரி மழை அளவான 861 மிமீ காட்டிலும் தாண்டி 1289.27மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் ஒரு மாதம் உள்ளது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் நேற்று வரை 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மாவட்டத்தின் மேற்கே பச்சை மலை அடிவாரத்தில் களரம்பட்டி, அம்மாப்பாளையம் ஆகிய 2 கிராம பொதுமக்கள், விவசாயிகள் பயனடையக்கூடிய களரம்பட்டி பெரிய ஏரி நேற்று இரவு 12.30 மணிக்கு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த களரம்பட்டி, அம்மாப்பாளையம் கிராமமக்கள், விவசாயிகள் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வழந்ததால் இரு கிராமமக்களும் மேள தாளங்களுடன் காலையில் சென்று, குருக்களை வைத்து பூஜை செய்து தண்ணீரை உற்சாகமாக வரவேற்றனர். கடந்த 2005ம் ஆண்டு பிறகு தற்போது கனமழையின் காரணமாக களரம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி வருவதை மக்கள் திருவிழாவை கொண்டாடுவதுபோல் மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து, அதிர் வேட்டுகள் முழங்கிட ஆனந்தத்துடன் ஆடிப்பாடி, குத்தாட்டம் போட்டு மலர்களை தூவி மகிழ்ந்து கொண்டாடினர்.

Related Stories: