சென்னை பெண் குற்றச்சாட்டு: ஆணவக்கொலை செய்ய முயற்சித்த அதிமுக மாவட்டச் செயலாளர்: தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு

மதுரை: சென்னை, கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த  கயல்விழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி. இவரது மனைவி கீர்த்திகா, அதிமுக மகளிரணி நிர்வாகி. இருவரும் எனது உறவினர்கள். நான் கல்லூரியில் படித்தபோது வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்தேன். அப்போது எனது உறவினரான முனியசாமி உள்ளிட்டோர் என்னை ஆணவக் கொலை செய்ய முயற்சித்தனர். வீட்டை விட்டு வெளியேறி நான் காதல் திருமணம் செய்தேன். ஆனாலும் முனியசாமி தரப்பினர் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றாமல், சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்ளும் அதிமுக மாவட்டச் செயலாளர்  முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க  வேண்டும். இவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சியான அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், இந்த மனு தனிநபர் பாதிப்பு தொடர்பானது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்வதற்காக அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது என கூறியுள்ளனர்.

Related Stories: