திருப்பூர்: திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த நாதம்பாளையத்தை சேர்ந்தவர் நாககுமார் (50). இவர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பதாகையுடன் மனு அளிக்க வந்தார். அந்த பதாகையில் ‘‘அதிமுக எம்எல்ஏவின் கையை வெட்டுவேன்’’ என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து அவர் கூறியதாவது: நான் வேலுச்சாமி என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.
இது குறித்து நான் அளித்த புகாரின் பேரில் வீட்டு உரிமையாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் அவரை கைது செய்ய வேண்டாம் என பெருமாநல்லூர் போலீசாரிடம் கூறியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. ஆனால், நைசாக பேசி வழக்கை வாபஸ் பெற வைத்துவிட்டனர். எனது வீட்டில் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் திருப்பூர் வடக்கு எம்எல்ஏவின் கையை வெட்டப்போவதாக பதாகை ஏந்தி வந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நாககுமார் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.