வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்தால் பட்டத்தை திரும்ப பெறும் சட்டம் அவசியம்: கேரள கவர்னர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு சட்டம் கொண்டு வருவது அவசியமாகும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்த மொபியா என்ற சட்ட கல்லூரி மாணவி வரதட்சணை காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான் சென்று அவரது பெற்ேறாருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘வரதட்சணைக்கு எதிராக அனைவரும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சொந்த உயிரை மாய்க்காமல் வாழ்ந்து ெகாண்டே வரதட்சணை கேட்பவர்களை எதிர்க்கும் துணிவு வரவேண்டும். வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு சட்டம் கொண்டு வருவது அவசியமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனாலும் கொடுமைகள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. இதை தடுக்க சமூகத்தில் விழிப்புணர்வு மிகவும் அவசியமாகும். வரதட்சணை கேட்பவர்களுக்கு எதிராக சமூக ரீதியாக எதிர்ப்பு அதிகரிக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: