புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நிரந்தர சட்டத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து மகாராஷ்டிராவிலும் அந்த மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த ரேக்ளா விளையாட்டு பந்தயத்துக்கான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ரேக்ளா விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் சி.டி.ரவிக்குமார் தரப்பில் நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் ‘ ரேக்ளா விளையாட்டு என்பது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது. இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இன்றளவும் ரேக்ளா விளயாட்டுக்கள் நடைமுறையில் இருந்து வருகிறது என தெரிவித்தார்.