செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை. ஒன்றிய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க www.eshram.gov.in என்ற புதிய தேசிய தரவுதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ESI PF பிடித்தம் செய்யாத அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்யலாம். அதன்படி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) கீழான தொழிலாளர்கள் தேசிய ஊரக நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழான சுய உதவிக்குழு உறுப்பினர்கள்( Member Under NRLM/NULM). உள்பட 156 வகை தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்.
இந்த பதிவு அனைத்து பொது சேவை மையங்களிலும் (CSC) நடக்கிறது. ஒன்றிய அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இந்த இணையத்தின் கீழ் இலவசமாக 16 வயது முதல் 59 வயதுக்கு உட்டபவர்கள் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஆதார் அட்டை ஆதாரில்உள்ள செல்போன் எண் வங்கி கணக்கு புத்தகம் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த தரவு தளத்தில் இணைத்து கொள்ளும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சத்துக்கான காப்பீடு PMSPY என்ற திட்டத்தின் மூலமாக பெறலாம். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அரசிடம் இருந்து இந்த அடையாள அட்டையின் மூலம் தொடர்ந்து சலுகைகளை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.