திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணையிலிருந்து நகரி ஆறு வழியாக திறந்துவிடப்பட்டுள்ள நீர் பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி மழை நீர் போன்றவைகளால் பூண்டி சத்யமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 26344 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. எனவே இதைக் கருத்தில் கொண்டும் அணையின் பாதுகாப்பு கருதியும் உபரி நீர் வினாடிக்கு 25060 ஆயிரம் கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.41 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 2953 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது.