வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.129.59 கோடி வைப்பு நிதிக்கான காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது நடப்பதற்கு ஏதுவாக பெரிய திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து நிதி உதவி செய்யும் விதமாக, ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியின் கீழ் ரூ.5 கோடி வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டி தொகையில் இருந்து திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு கோயிலுக்கும் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி மொத்தம் 129 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக நேற்று வழங்கினார். இதன்மூலம் திருக்கோயில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைக்கப்பெறுவதால், பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, ஒருகால பூஜை மேற்கொள்ளும் திருக்கோயில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் ஆகியோர் கூடுதலாக நிதி வழங்கியமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்துசமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: