பல பெண்களுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை: வீட்டில் மயங்கி கிடந்ததாக டாக்டர்களிடம் நாடகம்; மருத்துவமனையிலிருந்து தப்ப முயன்ற கணவன் கைது

சென்னை: பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் மயங்கி கிடந்ததாக டாக்டர்களிடம் நாடகமாடி, தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (33), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, ஹேமாவதி (24) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, ஆயுஸ்யா (5) என்ற குழந்தை உள்ளது. வினோத்குமாருக்கு அவரது சகோதரர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதை அவரது மனைவி ஹேமாவதி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதவிர வினோத்குமார் வேலை செய்யும் அலுவலகத்தில் பணியாற்றும் கொளத்தூரை சேர்ந்த பெண் உள்பட மேலும் சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததால், மனமுடைந்த ஹேமாவதி, தனது கணவரை பிரிந்து வடபழனியில் உள்ள தாய் வீட்டில், குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி விவாகரத்துக்கு விண்ணப்பித்து, வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வினோத்குமார் தனது குடும்பத்துடன் ஹேமாவதி வீட்டிற்கு சென்று, இனிமேல் இதுபோன்று நடக்க மாட்டேன் என்று மனைவி மற்றும் மாமனாரிடம் உறுதியளித்துளார். இதனால், விவாகரத்து வழக்கை ஹேமாவதி திரும்ப பெற்று, வினோத்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே வினோத்குமார் மீண்டும் அந்த 2 பெண்களுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், தம்பதி இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் நேற்று மாலை தனது மனைவியை சுயநினைவு இல்லாத நிலையில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது ஹேமாவதியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதுபற்றி வினோத்குமாரிடம் கேட்டபோது, நான் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி மயங்கிய நிலையில் கிடத்ததார்.

அதனால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தேன், என தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் டாக்டர்கள் இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை நோட்டமிட்ட வினோத்குமார், மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முயன்றார். விரைந்து வந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத் துள்ளதாக என்னை மனைவி கண்டித்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வினோத்குமார் மீது கொலை வழக்கு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: