சென்னை: குரோம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (32), ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கும் அர்ச்சனா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணை தகராறில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை சார்பில், இளநிலை உதவியாளர் பிரேமா மார்க் என்பவரிடம் கிருஷ்ண பிரசாத் பரிந்துரை கடிதம் கோரியுள்ளார். அதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும், என பிரேமா மார்க் கூறியுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் கிருஷ்ண பிரசாத் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி, முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை நேற்று பிரேமா மார்க்கிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், பிரேமா மார்க்கை கைது செய்தனர்.