விமானத்தில் ரூ.1.12 கோடி தங்கம் கடத்தல் பிடிபட்ட குருவியை வைத்து கடத்தல் ஆசாமிகள் கைது

சென்னை: அபுதாபியிலிருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை சேதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயது ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த பயணி சுங்கத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அவரை சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்த காபி மேக்கர் மிஷினில் தங்கப்பசையை கடத்தி வந்தது தெரிந்தது. அதன் எடை 2.6 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.12 கோடி. அதை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர். விசாரணையில், அவர் கடத்தல் குருவி என்பது தெரியவந்தது. அவரை கடத்தலில் ஈடுபடுத்திய ஆசாமிகளை சுற்றி வளைத்துப்பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடத்தல் ஆசாமிகளிடம் செல்போனில் பேசவைத்து, சென்னை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். அதன்படி விமான நிலையம் வந்த 2 கடத்தல் ஆசாமிகளையும் சுற்றிவளைத்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: