கேரளாவை சேர்ந்த சர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: கேரளாவை சேர்ந்த சர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நெல்லையில் என் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பல குற்றப் பின்னணி கொண்ட சர்மிளா தொடர்பாக அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை வந்தது. அழைப்பாணை வந்ததின் பேரில் சாட்சியாக நேரில் ஆஜராகி உரிய விவரம் அளித்துள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல நகை கடை உரிமையாளரிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் இன்று ஒன்றிய அமலாக்கதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஆலப்புழாவில் வசிக்கும் சர்மிளா என்பவர் ரூ.2.5 கோடிக்கு தங்கம் வாங்கியுள்ளார். இதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நகை கடை நிறுவனம் சார்பில் அங்கமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக சர்மிளாவிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்கத்தை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொடுத்ததாகவும், அவர்தான் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருப்பு பணம் கையாளப்பட்டிருப்பதாக கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறைக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக சர்மிளாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அமலாக்க துறை தீர்மானித்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் விஜயபாஸ்கர் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தியது தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: