நாகர்கோவில் அருகே பரபரப்பு கோயில் பாதை பிரச்னையில் பாட்டில் குண்டு வீச்சு-30 பேர் மீது வழக்கு

சுசீந்திரம் :  நாகர்கோவில் அருகே கோயில்  பாதை பிரச்னையில் பொதுமக்களை அரிவாள் , ஆயுதங்கள் காட்டி மிரட்டியதுடன் பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ வைத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாகர்கோவில் அருகே உள்ள சின்னனைந்தான்விளை பகுதியில் பிச்சைகாலசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இந்த கோயிலில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோயில் பராமரிப்பு பணியை அந்த பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் மேற்ெகாண்டு வருகிறார்கள். சமீபத்தில் கோயிலுக்கு அலங்கார வளைவு மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இதற்கிடையே சுவர் கட்டுவதால் மற்றொரு தரப்புக்கு பாதை பிரச்னை ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, காவல் நிலையம் வரை பிரச்னை சென்றது. சுசீந்திரம் போலீசார் இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கார், பைக்குகளில் வந்த 30 பேர் கொண்ட கும்பல் கோயில் வளாகத்துக்குள் புகுந்து டியூப் லைட், சேர்கள் உள்பட அங்கிருந்த ெபாருட்களை சூறையாடியதுடன், கடப்பாரை, கத்தி, அரிவாள் உள்ளிட்டவை கொண்டு சுவரையும் இடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் இந்த கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஆயுதங்களுடன் வந்திருந்த கும்பல், அரிவாள், கடப்பாரை மற்றும் ஆயுதங்களை காட்டி கொல்லாமல்  விட மாட்டோம் என மிரட்டினர். ஆனால் அந்த பகுதி மக்கள் பிடிக்க முயன்றதால், ஏற்கனவே பீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் நிரப்பி திரி போட்டு வைத்திருந்தனர்.

பொதுமக்கள் திரண்டதை தொடர்ந்து, தீ பற்ற வைத்து பாட்டில்களை வீசினர். இதில் ஒரே ஒரு பாட்டில்  மட்டும் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக ெபாதுமக்கள் மீது விழவில்லை. 2,3 பாட்டில்களில் வீசும் போதே தீ அணைந்து விட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது.  இந்த சம்பவத்தில் 10 சேர்கள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டன.

 இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் போலீசார், அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த சமயத்தில் பொதுமக்கள் திரண்டு, தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ெபாதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அந்த கும்பல் வந்த பைக், கார் எண்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சின்னனைந்தான்

விளையை சேர்ந்த ஐயப்பன் (45), சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த முத்துலிங்கம், ஆனந்த், ராஜூ, மனோஜ், கிருஷ்ணன், கணேசன் மற்றும் கண்டால் தெரியும் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: