தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!: தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது..வானிலை மையம் தகவல்..!!

டெல்லி: தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையோரம் ஒதுங்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆனால் இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை தொடரும் என்றே கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை பொறுத்தமட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை மிதமான மழையே தொடரும் என்பது வானிலை ஆய்வு மையத்தின் கருத்தாக உள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Related Stories: