செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, இங்குள்ள அனைத்து ஏரிகளிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஏரிகள் முழு கொள்ளளவை தாண்டி உபரி நீர் வடிந்து ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். ஒருசில பகுதியில் ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேலேரிப்பாக்கம் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் நாசமானது. இது குறித்து, தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடைந்த ஏரியில் மணல் மூட்டைகளை போட்டு, வெளியேறும் நீரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் 75சதவீத தண்ணீர் வெளியேறி வீணானது. இதே போன்று மாவட்டத்தின் அனைத்து ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேறி பயிர்கள் நாசமானது. மாவட்டத்தில் ஆத்தூர், திம்மாவரம், பாலூர் வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை, கத்திரி, மிளகாய், தக்காளி, வெண்டை ஆகியன தண்ணீரில் மூழ்கி நாசமானது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் மகாலட்சுமி நகரில் நீஞ்சல் மடு அணையின் கரை உடைந்து 300வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வைபவ்நகர் பாலாறு நகரில் 200வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஜெ.சி.கே நகரில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளை விட்டு வெளியேறமுடியாமல் அவதியுற்று வந்தனர். அவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டனர்.
நகராட்சிக்குட்பட்ட களத்துமேடு, அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் பகுதியில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில் உள்ள குண்டூர் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், வேதாச்சலநகர், காண்டிபன் தெரு, வீரக்குடி வேளாளர்தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், செங்கல்பட்டு மதுராந்தகம் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னகரை ஏரி நிரம்பி உபரிநீர் செல்வதால், நகராட்சிக்குட்பட்ட காந்திநகர், நின்னகரை, காட்டூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சிங்கபெருமாள் கோயில் அடுத்த பாரேரியின் உபரிநீர் செல்வதால், சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .