காங். மீது மக்கள் அதிருப்தி சுக்பிர் பாதல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்ட காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று சிரோன்மணி அகாலி தள தலைவர் சுக்பிர் பாதல் குற்றம்சாட்டினார்.  இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘ பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி இரு கட்சிகளும் தோல்வி அடைவது உறுதி. மக்களின் பாதுகாவலன் போன்று தன்னை காட்டிக்கொண்டு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நாடகம் ஆடுகிறார். ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் அளித்த வாக்குறுதிகளை டெல்லியில் ஏன் நிறைவேற்றவில்லை. பஞ்சாபில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறும் கெஜ்ரிவால், டெல்லியில் 100 ரூபாயாவது மகளிருக்கு கொடுத்தாரா?.

கடந்த நான்கரை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகள் ஸ்தம்பித்துவிட்டது. 5 ஆண்டில் காங்கிரசில் ஒரு முதல்வர் கூட ஸ்திரமாக இல்லை. மக்களின் உணர்வுகளோடு விளையாடி அவர்களை ஏமாற்றிவருகின்றனர். வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்ட காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.   சிரோன்மணி அகாலிதள கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக போராடும் கட்சி என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சிரோன்மணி அகாலிதளம்-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி பஞ்சாபில் ஆட்சியை பிடித்து அனைத்து வளர்ச்சி பணிகளையும் மாநிலத்துக்கு கொண்டுவரும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: