வினாத்தாள் வாட்ஸ்அப்பில் அவுட் உ.பி.யில் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருந்தது. மொத்தம் 19.99 லட்சம் விண்ணப்பதாரர்கள் இதற்காக விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு  மையங்கள் உட்பட அனைத்தும்  தயார் நிலையில் இருந்தது. தேர்வு தொடங்க இருந்த நேரத்தில் வாட்ஸ்அப் மூலமாக  வினாத்தாள் வெளியானது. இதனால் உடனடியாக ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டது.  இது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறுகையில், ‘சிறப்பு படை போலீசார் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தினார்கள்.

வினாத்தாள் வெளியிட்டது தொடர்பாக இதுவரை 23பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வினாத்தாள் புகைப்பட நகல் கைப்பற்றப்பட்டது. அது அரசின் வினாத்தாளுடன் ஒப்பிடப்பட்டது. அதே வினாத்தாள் தொகுப்பு தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரசு உடனடியாக தேர்வை ரத்து செய்வதற்கு முடிவு செய்தது. அடுத்த ஒரு மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்..’ என்றார்.

Related Stories: