சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் 464 இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது. சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளினால் தி.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே அங்கு நோய் பரவலை தடுக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அனைவரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், மொட்டை மாடிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.